பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கப்பல் கட்டும் தள அதிகாரி கைது

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை மசகான் கப்பல் கட்டும் தளத்தில் பணியாற்றும் 31 வயது அதிகாரி ஒருவர், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மசகான் கப்பல் கட்டும் நிறுவனம் மும்பையில் இருந்து செயல்படுகிறது. கடற்படைக்கான கப்பல்களை கட்டுதல் மற்றும் பழுது நீக்கும் பணிகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தில் கட்டமைப்பு உருவாக்குபவரான பணியாற்றி வரும் கல்பேஷ் பைக்கர் என்ற 31 வயது அதிகாரியை, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) கைது செய்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் அந்நாட்டு பெண் உளவாளி ஒருவரின் ஹனி ட்ராப்பில் சிக்கி, அவரிடம் ரகசிய தகவல்களை கல்பேஷ் பைக்கர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமூக ஊடகம் மூலம் கல்பேஷ் பைக்கருடன் அப்பெண் நட்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளார். வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் பல மாதங்களாக இருவரும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். பணத்துக்காகவும் பைக்கர் தகவல்களை பகிர்ந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக அலுவல் ரகசியங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கல்பேஷ் பைக்கர் மற்றும் பாகிஸ்தான் முகவருக்கு எதிராக ஏடிஎஸ் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கல்பேஷ் பைக்கரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எந்த வகையான தகவல்களை பைக்கர் பகிர்ந்து கொண்டார் என்பதை ஏடிஎஸ் தெரிவிக்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE