குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்ப்பது குற்றமல்ல என்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு கொடுமையானது: உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல என்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவு மிகக் கொடுமையானது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் தனது மொபைல் போனில் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அவர் மீது அம்பத்தூர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்திருந்த உத்தரவில், ‘‘ இரு சிறார்கள் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் 2 வீடியோக்களை மனுதாரர் தனது மொபைல் போனில் பார்த்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆபாச படங்களைப் பார்த்ததை மனுதாரரும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆபாச வீடியோக்கள் பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டதாகவும், அதில் இருந்து மீள உளவியல் ரீதியிலான சிகிச்சைக்கு செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். பொதுவாக மொபைல் போனில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் இல்லை என்பதால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ்குற்றம் சாட்ட முடியாது. கேரளாஉயர் நீதிமன்றமும் ஆபாச படங்கள், வீடியோக்கள் பார்ப்பது தவறு இல்லை என தீர்ப்பளித்துள்ளது.

மேலும், தகவல் தொழில்நுட்ப சட்டப்படி ஆபாச படங்களை எடுத்து அதை மற்றவர்களுக்கு அனுப்பினாலோ அல்லது வெளியிட்டாலோ குற்றமாகும். மனுதாரர்அதுபோன்ற குற்றச்செயலில் ஈடு படவில்லை என்பதால் அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

அதேநேரம் பதின்ம வயது சிறார்கள் எந்தவொரு தணிக்கையும் இல்லாமல், எல்லா வீடியோக்களையும் அவர்களால் தங்கு தடையின்றி மொபைல் போனில் பார்க்கமுடிகிறது. முன்பு எப்படி புகைப்பழக்கத்துக்கும், மது பழக்கத்துக்கும் இளைய தலைமுறை அடிமையானதோ அதுபோல இப்போது ஆபாசபடங்களைப் பார்ப்பதற்கும் அடிமையாகி உள்ளனர்.

குறிப்பாக 12 முதல்17 வயதுக்குள்ளான பதின்ம வயதினர் ஆபாச படங்களை பார்க்கும் பழக்கத்துக்கு அதிகளவில் அடிமையாகி உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதனால், இவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை உளவியல் ரீதியான ஆலோசனைகள் மற்றும் வாழ்வியல் நெறிசார்ந்த கல்வி மூலமாக மீட்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து குழந்தைகள் உரிமைக்கான கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது, சட்டவிரோதமானது என வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், தனிநீதிபதி எவ்வாறு இதுபோல உத்தரவிட முடியும் என்றும், இது மிகக்கொடுமையானது என்றும் கருத்துதெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தமிழக போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE