உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பாஜக மூத்த தலைவர் உபேந்திர சிங் ராவத். இவர் இதே தொகுதியில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக மேலிடம் வாய்ப்பு வழங்கி இருந்தது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் அண்மையில் இவர் பெயரில் ஒரு ஆபாச வீடியோ வெளியானது. அந்த சர்ச்சைக்குரிய வீடியோவில் படுக்கையறையில் பெண் ஒருவருடன் ஆண் ஒருவர் அலங்கோலமாக காட்சி தருகிறார். அந்த ஆண் பாஜக எம்.பி. உபேந்திர சிங் ராவத் என்கிற பதிவுகளுடன் இந்த வீடியோ பகிரப்பட்டு வந்தது. இதற்கு எதிராக உபேந்திரா ராவத் தரப்பில் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உபேந்திர சிங் ராவத் நேற்று கூறியதாவது: எனது பெயரையும், புகழையும் விரும்பாத சமூக விரோதிகள் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர். ஏஐ தொழில் நுட்பம் மூலம் எனது உருவத்தை ஆபாச வீடியோவில் இணைத்து அவதூறு செய்துவிட்டனர். இதனால் பாராபங்கி மக்களவைத் தொகுதியில் இருந்து நான் போட்டியிட வில்லை. இந்தத் தேர்தலில் இருந்து விலகிக் கொள்கிறேன். என் மீதான குற்றச்சாட்டு பொய்யென நிரூபிக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.