புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் 2019-ல் பாஜகவில் இணைந்தார். 2019 மக்களவைத் தேர்தலில் கிழக்கு டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷியை 6.95 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த சூழலில் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கவுதம் கம்பீர் நேற்று வெளியிட்ட பதிவில், “வரவிருக்கும் கிரிக்கெட் தொடர்களில் கவனம் செலுத்தும் வகையில் எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு ஜே.பி. நட்டாவிடம் கேட்டுக் கொண்டேன். மக்களுக்குச் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
பின்னணி என்ன?: டெல்லி யூனியன் பிரதேசத்தில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளையும் 2019 தேர்தலில் பாஜக கைப்பற்றியது. தற்போதைய பாஜக எம்பிக்களுக்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கிறதா, வரும் மக்களவைத் தேர்தலில் அவர்களுக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறதா என்பன குறித்து டெல்லி பாஜக சார்பில் கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு கட்சி தலைமையிடம் அண்மையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாது என முன்கூட்டியே அறிந்து தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக கம்பீர் அறிவித்ததாக பாஜகவினர் கூறுகின்றனர்.