பாஜக தலைமையிலான கூட்டணிக்கு முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவு அதிகரிக்கும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

குவாஹாட்டி: இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நேற்று கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ அரசு அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறது. சாலை உருவாக்கம், நீர்ப்பாசனக் கட்டமைப்பு, பழங்குடி மக்கள் மேம்பாடு என பல தரப்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. அந்த வகையில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வரும் தேர்தலில் சிறப்பாக செயல்படும்.

இந்தத் தேர்தலில், என்டிஏ கூட்டணிக்கு முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவு அதிகரிக்கும். குறிப்பாக, முத்தலாக் நடைமுறையை ஒழித்ததால், முஸ்லிம் பெண் வாக்களர்கள் என்டிஏ-வுக்கு ஆதரவு வழங்குவார்கள். என்டிஏ 400-க்கு மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும். காங்கிரஸ் 40 இடங்களில் வெல்வதே கடினம்.

எங்களது இந்திய குடியரசுக் கட்சி சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவானது. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு சில சிக்கல்கள் இருக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE