மத்திய அரசு ஊழியர் பயிற்சி நிறுவனங்களை தர மதிப்பீடு செய்ய கியூசிஐ, ஐகேர் தேர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: கர்ம யோகி திட்டத்தின் கீழ், மத்திய அரசின் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கு கியூசிஐ (QUALITY COUNCIL OF INDIA) மற்றும் ஐகேர் (ICARE) ஆகிய இரண்டு தரமதிப்பீட்டு நிறுவனங்களை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.

இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள அரசுபயிற்சி நிறுவனங்களை, தரமதிப்பீடு செய்யும் பணி கியூசிஐ நிறுவனத்துக்கும், தெற்கு, மேற்கு,கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் உள்ள அரசு பயிற்சி நிறுவனங்களை தர மதிப்பீடு செய்யும் பணி ஐகேர் நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.

குமாஸ்தாவிலிருந்து, ஐஏஎஸ் அதிகாரி வரை அனைவருக்கும் வழங்கப்படும் பயிற்சி முறைகளின் தரம் குறித்து, இந்த இரு நிறுவனங்களும் மதிப்பீடு செய்ய உள்ளன. ஐகேர் சென்னையைச் சேர்ந்தநிறுவனம் ஆகும். உயர் கல்விநிறுவனங்களின் தரமதிப்பீட்டிற்காக மத்திய அரசு பயன்படுத்தி வரும் என்ஐஆர்எப் (NIRF) வழிமுறை இந்நிறுவனம் உருவாக்கியதாகும்.

கர்ம யோகி திட்டம்: ‘கர்ம யோகி’ திட்டத்திற்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படவுள்ள வாய்ப்பு குறித்து, ஐகேர்நிறுவனத்தின் துணைத் தலைவர் கார்த்திக் தர் கூறுகையில், “இத்திட்டத்திற்கு செயல் வடிவம்கொடுப்பதற்காக பிரத்யேகமாக ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. உலகத்தில் பல்வேறு நாடுகளில் நடப்பில் இருக்கும் சிறந்த தர நிர்ணய முறைகளைக் கருத்தில் கொண்டும், நம் நாட்டின் பிரத்யேக தேவைகளுக்கு ஏற்பவும் ஒரு பொதுவான தர நிர்ணய முறையை இந்த ஆணையம் உருவாக்கியுள்ளது.

இந்தத் திட்டத்தில் எங்களுடைய முக்கியமான பணி, மத்தியஅலுவலர்களுக்கென நாடெங்கிலும் உள்ள பயிற்சி நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்வதும் (Assessment), அங்கீகாரம் (Accreditation) வழங்குவதுமாகும். தவிர, பயிலகங்கள் தங்கள் தரத்தைத் தொடர்ந்து அதிகப்படுத்துவதற்கான வழிகாட்டுதலையும், ஆலோசனைகளையும் வழங்கு வோம்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE