கர்ப்பிணிப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்த கொடூரம் - ம.பி அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

மொரேனா: மத்தியப் பிரதேசம் மொரேனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணிப் பெண்ணை மூன்று ஆண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அந்தப் பெண்ணின் உடலில் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம், மொரேனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் வசித்து வந்திருக்கிறார். இந்தப் கர்ப்பிணி பெண்ணின் கண்வர், ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த கர்ப்பிணி பெண், தனது கணவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பெண்ணின் வீட்டுக்கு சமரசம் பேசுவதற்காக சென்றிருக்கிறார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்த மூன்று ஆண்கள், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதன் பிறகு, குற்றம்சாட்டப்பட்ட மூன்று ஆண்களும், வீட்டில் இருந்த ஒரு பெண்ணும் சேர்ந்து அந்த கர்ப்பிணிப் பெண் மீது எரிபொருளை ஊற்றி எரித்துள்ளனர். மொரேனா மாவட்டத்தில் உள்ள அம்பா நகரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள சந்த்கா புரா கிராமத்தில் வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தற்போது பாதிக்கப்பட்ட பெண் 80 சதவீத தீக்காயங்களுடன் குவாலியரில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். கர்ப்பிணிப் பெண்ணின் கணவர், இது தொடர்பான வீடியோ ஒன்றை காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE