புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் குறித்து மக்களவை உறுப்பினர் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் புகார் அளித்ததைத் தொடர்ந்து அதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்று ஆகாசா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போபால் மக்களவை தொகுதி எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்குர். இவர் பிப். 15-ம்தேதி மும்பையிலிருந்து டெல்லிக்கு ஆகாசா ஏர் விமானத்தில் பயணம் செய்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய பிறகு, ஆகாசா ஏர் நிறுவனத்தின் பணி மேலாளர் இம்ரான் மற்றும் அவரது சக அதிகாரிகள் சாத்வி பிரக்யாவை உடனடியாக வெளியேறவிடாமல் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த மோசமான அனுபவம் குறித்து எக்ஸ் பக்கத்தில். “வேண்டுமென்றே தாமதிக்கும், மற்றும் இழப்பை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து துறை ஜோதிராதித்ய சிந்தியாவிடம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ஆகாசா ஏர் நிறுவன செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “பிரக்யா தாக்குருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்துக்காக வருந்துகிறோம். அவருக்கு சிரமம் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கோருகிறோம். இந்த சம்பவம் குறித்து நாங்கள் விரிவான விசாரணை மேற்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.