“பாரத ரத்னா விருது அறிவிப்பை சர்ச்சையாக்க வேண்டாம்” - தேவகவுடா அறிவுரை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாரத ரத்னா விருதை சர்ச்சையாக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளை முன்னாள் பிரதமர் தேவகவுடா கேட்டுக்கொண்டுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா குறித்த விவாதத்தில் பங்கேற்று மாநிலங்களவையில் பேசிய முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா, "மிக உயர்ந்த தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது கொடுப்பது என்ற மிக முக்கிய முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளார். அதில் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்த முயல வேண்டாம்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் நானும் எனது மனைவியும் கலந்து கொண்டோம். லட்சக்கணக்கான இந்தியர்களைப் போன்றே அந்த தருணம் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியையும் பக்தியையும் அளித்தது. அயோத்தி ராமர் நமது இதயங்களிலும் மனங்களிலும் நிறைந்திருக்கிறார். நமது முன்னோர்களும் மூத்தவர்களும் ராமரின் உருவம் நமது மனங்களில் நிரந்தரமாக இருக்கும்படி செய்துள்ளார்கள். ராமர் நேர்மையின்; பணிவின் வடிவம். தர்மத்தையும் ராஜ தர்மத்தையும் பின்பற்றியவர். அனைவரையும் தன்னோடு இணைத்துக்கெண்டவர்.

பகவான் ராமரின் நற்பண்புகள்தான் மகாத்மா காந்தியை வழிநடத்தின. நமது நாட்டின் நற்பண்புகளின் அடையாளமாக ராமர் திகழ்கிறார் என கூறியவர் மகாத்மா காந்தி. பகவான் ராமர் மற்றும் அவரது தெய்வீகத்தின் மூலம் நமது நாடு இணைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் அடித்தளமாக அவர் இருக்கிறார். அயோத்தி ராமர் கோயில் நமது நாட்டின் மற்றும் உலகின் அடையாளமாக திகழ வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். மற்றொரு விஷயம் என்னை மகிழ்ச்சி அடையச் செய்தது. அது, ராமர் கோயில் பிராண பிரதிஷ்டைக்காக பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் இருந்தது. இந்த விழாவுக்காக அவர் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE