மக்களவை தேர்தலில் வட மாநிலங்களில் பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ. கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக இந்தியா டுடே கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் முடிவகள் எப்படியிருக்கும் என இந்திய டுடே குழுமம், 543 மக்களவை தொகுதிகளில் சுமார் 35,000 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது.
அதில் கூறியிருப்பதாவது: வரும் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ.கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இண்டியா கூட்டணி 166 இடங்களிலும் மற்ற கட்சிகள் 42 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. வட மாநிலங்களில் தே.ஜ. கூட்டணி வெற்றி வலுவாக இருப்பதால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் பிஹாரில் தே.ஜ கூட்டணி அதிக வெற்றி பெறும். மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. பாஜக 19 இடங்களை பெற வாய்ப்புள்ளது. கர்நாடகாவில் மட்டும் மொத்தம் உள்ள 28 இடங்களில் பாஜக 24 இடங்களை கைப்பற்றலாம். பிற தென் மாநிலங்களில் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.