நரசிம்ம ராவ் உள்பட மூவருக்கு பாரத ரத்னா: சோனியா காந்தி வரவேற்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதை வரவேற்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியிடம் பாரத ரத்னா அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "அதனை நான் வரவேற்கிறேன். ஏன் கூடாது?" என்று தெரிவித்தார். முன்னதாக, முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டார்.

பிதரமர் மோடி தனது பதிவில், "முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது நமது அரசின் அதிர்ஷ்டம். நாட்டுக்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்புக்காக இந்த மரியாதை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

இதபோல், முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது குறித்த அறிவிப்பில், "ஒரு சிறந்த அறிஞராகவும், அரசியல் தலைவராகவும் இருந்து பல்வேறு பதவிகளின் மூலம் நாட்டிற்காக பி.வி.நரசிம்ம ராவ் பணிபுரிந்தார். அவர் பிரதமராக இருந்த காலம், பொருளாதார வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை வளர்த்தது. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தை செழுமைப்படுத்திய ஒரு தலைவராக நரசிம்ம ராவ் திகழ்ந்தார்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்எ.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்க இருப்பது குறித்த அறிவிப்பில், "விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனில் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாட்டின் சிறந்த குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருது பிஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர் மற்றும் முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE