ஹேமந்த் சோரனுக்கு 5 நாட்களுக்கு காவல் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை மேலும் 5 நாட்களுக்கு அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன்,நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜனவரி 31-ம் தேதி இரவு கைது செய்யப்பட்டார். சுமார் 7 மணி நேர விசாரணைக்கு பிறகு அவரை அமலாக்கத் துறை கைது செய்தது.

இதையடுத்து அவரை 5 நாட்களுக்கு அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் கடந்த 2-ம் தேதி அனுமதி வழங்கியது. ஹேமந்த் சோரனின் அமலாக்கத் துறை காவல் நேற்று முடிந்தவடைந்த நிலையில் அவர், டெல்லியில் உள்ள பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஹேமந்த் சோரனின் அமலாக்கத் துறை காவலை மேலும் 5 நாட்களுக்கு சிறப்பு நீதிபதி நீட்டித்தார்.

ஹேமந்த் சோரன் நேற்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிமன்றத்திற்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் ஹேமந்த் சோரனுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது கட்சியின் மூத்த தலைவர் சம்பய் சோரன் கடந்த 2-ம் தேதி ஜார்க்கண்ட் புதிய முதல்வராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE