“அமலாக்கத்துறை அச்சுறுத்தல்களுக்கு பயப்படமாட்டோம்” - டெல்லி அமைச்சர் அதிஷி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “கடந்த இரண்டு ஆண்டுகளாக அமலாக்கத்துறை சோதனைகள் மூலம் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை அச்சுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களின் வீடுகளில் இருந்து ஒரு ரூபாய் கூட கைப்பற்ற முடியவில்லை. இந்த அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்” என்று டெல்லி பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி கூறியுள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அதிஷி சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் சோதனைகள் மூலமாக அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். மதுபான கொள்கை ஊழல் என்ற பெயரில் சிலரின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது, சிலருக்கு சம்மன் அனுப்பப்படுகிறது மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான சோதனைகள் நடத்தப்பட்டும், அமலாக்கத்துறை இதுவரை ஒரு ரூபாயைக் கூட கைப்பற்றவில்லை.

ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக நீதிமன்றம் கூறிய நிலையிலும் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரும் அமலாக்கத்துறை ஒரு உறுதியான ஆதாரத்தைக் கூட கண்டுபிடிக்கவில்லை. அரசுதரப்பு சாட்சியிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழங்கிய அறிக்கை மாறியிருந்தது. வீடியோ ஆதாரங்கள் வழங்ப்பட்டது, அதில் ஒலி நீக்கப்பட்டிருந்தது.

இப்போதும் ஆம் ஆத்மி கட்சியின் பொருளாளர், எம்.பி., என்.டி குப்தா, அரவிந்த் கேஜ்ரிவாலின் செயலாளர் மற்றும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய புலனாய்வு நிறுவனங்கள் மூலமாக பாஜக எங்கள் கட்சியை ஒடுக்க நினைக்கிறது. ஆனால் அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லி கொள்கிறேன். நாங்கள் இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம்” இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, டெல்லி முதல்வரின் தனிச் செயலாளர், ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்கள் சிலரின் வீடுகளில் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) சோதனை நடத்தினர். முதல்வரின் தனிச்செயலாளர் பிபவ் குமார் மற்றும் டெல்லி ஜல் போர்டு (டிஜேபி) முன்னாள் உறுப்பினர் ஷலப் குமார் ஆகியோரின் வீடுகள், மேலும் சில ஆம் ஆத்மி கட்சியினர் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. டெல்லி ஜல் போர்டில் வழங்கப்பட்ட டெண்டர் முறைகேடு தொடர்பாக இந்த பணமோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புதிய மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அனுப்பிய 5வது சம்மனையும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நிராகரித்து சில தினங்களுக்கு பின்னர் இந்தச் சோதனை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE