புதுடெல்லி: மத்திய அரசால் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்கள் குறித்து மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி அளித்த பதில் வருமாறு:
நாட்டில் 3,697 பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னங்கள் மற்றும் இடங்களை தொல்பொருள் ஆய்வுக் கழக அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து அவற்றின் நிலையை மதிப்பிடுகின்றனர். நாட்டில் பல நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.
ஆக்கிரமிப்பை பொறுத்தவரை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றப்படாவிட்டால் அவற்றைஇடிப்பதற்காக உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட நினைவிடங்கள் சேதப்படுத்தப்பட்டால், 1958-ம் ஆண்டு, தொல்பொருள் இடங்கள் மற்றும் எச்சங்கள் சட்டத்தின் கீழ் போலீஸ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
இவ்வாறு மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி கூறியுள்ளார்.