தேர்தல் பணி, பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேர்தல் தொடர்பான பணிகள் அல்லது பிரச்சார செயல்பாடுகளில் குழந்தைகளைப் பயன்படுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது என்று கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுத்து, தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேர்தல் ஆணையம், அதன் முந்தைய உத்தரவுகளின் தொடர்ச்சியாக தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும், குழந்தைகளைப் பயன்படுத்துவது குறித்து கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு, கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் அல்லது கோஷமிடுதல், பிரச்சாரப் பேரணிகள், தேர்தல் கூட்டங்கள் போன்றவற்றில் பங்கேற்பது உட்பட எந்த வடிவத்திலும் குழந்தைகளைத் தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறையின் போது கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் குழந்தைகளை எந்த வகையிலும் பயன்படுத்துவதை தேர்தல் ஆணையம் சகித்துக் கொள்ளாது.

தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் குழந்தைகளின் பங்கேற்பைத் தடை செய்தல்: பேரணிகள், கோஷமிடுதல், சுவரொட்டிகள் அல்லது துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் அல்லது தேர்தல் தொடர்பான வேறு எந்த நடவடிக்கையிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று அரசியல் கட்சிகள் அறிவுறுத்தப்படுகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் குழந்தைகளைத் தங்கள் கைகளில் வைத்திருப்பது, வாகனம் அல்லது பேரணிகளில் ஒரு குழந்தையைத் தூக்குவது உட்பட எந்த வகையிலும் பிரச்சார நடவடிக்கைகளுக்கு குழந்தைகளைப் பயன்படுத்தக்கூடாது.

கவிதை, பாடல்கள், உரையாடல்கள், அரசியல் கட்சி வேட்பாளரின் சின்னங்களை காட்சிப்படுத்துதல், அரசியல் கட்சியின் சித்தாந்தத்தை வெளிப்படுத்துதல், ஒரு அரசியல் கட்சியின் சாதனைகளை ஊக்குவித்தல் அல்லது மாற்று அரசியல் கட்சிகள், வேட்பாளர்களை விமர்சித்தல் உள்ளிட்ட எந்த வகையிலும் அரசியல் பிரச்சாரத்துக்குக் குழந்தைகளைப் பயன்படுத்துவதற்கும் இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஓர் அரசியல் தலைவருக்கு அருகில் ஒரு குழந்தை தனது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் இருப்பது, வழிகாட்டுதல்களை மீறுவதாகக் கருதப்படாது. தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் மைனர் குழந்தைகளை பங்கேற்கச் செய்வதை அரசியல் கட்சிகள் அனுமதிக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஆணையத்தின் உத்தரவுகள் எடுத்துக்காட்டியுள்ளன.

தேர்தல் தொடர்பான பணிகள் அல்லது நடவடிக்கைகளின் போது குழந்தைகளை எந்தவொரு வகையிலும் ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு அனைத்துத் தேர்தல் அதிகாரிகளுக்கும், அமைப்புகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

குழந்தைத் தொழிலாளர் தொடர்பான அனைத்து சட்டங்களும் பின்பற்றப்படுவதை உறுதி செய்வது மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குத் தனிப்பட்ட பொறுப்பாகும். தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட தேர்தல் இயந்திரங்கள் இந்த விதிகளை மீறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்