உத்தர பிரதேச மக்களவை தேர்தலில் முஸ்லிம் வாக்காளரை கவர பாஜக வியூகம்

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மக்களவை தேர்தலுக்கு முன்பாக முஸ்லிம் வாக்காளர்களை கவர பாஜக ‘குவாமி சவுபால்’ என்ற புதிய பிரச்சார வியூகத்தை கையில் எடுக்க உள்ளது.2019 மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மேற்கு உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 19 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி 7 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால், இந்த முறை உத்தர பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளையும் முழுவதுமாக கைப்பற்ற பாஜக வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மக்களவை தொகுதிகளில் சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக கவரும் வகையில் புதிய பிரச்சார வியூகத்தை பாஜக கையில் எடுக்க உள்ளது. முசாபர்நகர் மாவட்டம் கசர்வா கிராமத்தில் இருந்து பிப்ரவரி 10-ம் தேதி இந்த புதிய பிரச்சாரத்தை பாஜக தொடங்க உள்ளது.

‘குவாமி சவுபால்': மேற்கு உத்தர பிரதேசத்தின் 23 மக்களவைத் தொகுதிகளில் நடத்தப்படும் ‘குவாமி சவுபால்' நிகழ்ச்சிக்கு தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக பாஜகவின் சிறுபான்மை மோர்ச்சாவின் உத்தர பிரதேச பிரிவு தலைவர் குன்வர் பாசித் அலி தெரிவித்தார்.

அதன்படி, சஹாரன்பூர், முசாபர்நகர், கைரானா, மீரட், பாக்பத், புலந்த்ஷாஹர், பிஜ்னோர், அம்ரோஹா, ராம்பூர், பரேலி, ஆக்ரா, அலிகார் உள்ளிட்ட முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் 23 மக்களவைத் தொகுதிகளில் பாஜக அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு அரசு செய்து வரும் பணிகள் குறித்து இந்த பிரச்சாரத்தின்போது விளக்கப்பட உள்ளது.

அதேபோன்று, முஸ்ஸிம் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் அவர்களது கோரிக்கைகள் குறித்தும் கேட்டறியப்பட உள்ளது.

சிறுபான்மை சமூகத்தினரின் நம்பிக்கையை பெறும் வகையில்4,100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ‘குவாமி சவுபால்' பிரச்சாரநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பாசித் அலி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE