வரும் 9-ம் தேதி முதல் ‘பாரத் அரிசி’ விற்பனை; 1 கிலோ ரூ.29 என விலை நிர்ணயம்: மத்திய அரசு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அரசு அறிமுகம் செய்யும் மானிய விலை அரிசியான ‘பாரத் அரிசி' வரும் 9-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஓராண்டில் இந்தியாவில் அரிசியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அரசு ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் மானிய விலை அரிசித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 1 கிலோ அரிசி ரூ.29-க்கு விற்பனை செய்யப்படும். ‘பாரத் அரிசி' விற்பனை வரும் 9-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உணவுத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு வகையான அரிசிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. எனினும், அரிசியின் விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED), தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மற்றும் மத்திய அரசின் விற்பனை மையங்கள் (கேந்திரிய பந்தர்) மூலம் சில்லறை சந்தையில் மானிய விலையில் பாரத் அரிசியை ஒரு கிலோ ரூ.29-க்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார்.

முதற்கட்டமாக சில்லறை சந்தை விற்பனைக்கு 5 லட்சம் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளில் இது கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் அரிசி இணைய வழியிலும் விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அரிசி பதுக்கலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அரிசி கையிருப்பு விவரங்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திய உணவுத் துறை அமைச்சக வலைதளத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ஏற்கெனவே பாரத் ஆட்டா (கோதுமை மாவு) கிலோ ரூ.27.50, பாரத் தால் (பருப்பு வகைகள்) கிலோ ரூ.60 என மானிய விலையில் விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE