“பாரத ரத்னா... நான் பின்பற்றிய கொள்கைக்கு கிடைத்த கவுரவம்!” - எல்.கே.அத்வானி நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாரத ரத்னா விருது தனக்கு மட்டுமல்ல; தான் பின்பற்றிய கொள்கைக்கும் கிடைத்த கவுரம் என்று எல்.கே.அத்வானி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதனை அறிவித்துள்ளார். பாரத ரத்னா விருது தனக்கு அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள எல்.கே.அத்வானி, “இன்று எனக்கு வழங்கப்பட்டுள்ள பாரத ரத்னா விருதை மிகுந்த பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன். இது ஒரு நபராக எனக்குக் கிடைத்த கவுரவம் மட்டுமல்ல, நான் எந்தக் கொள்கைக்காகவும், லட்சியங்களுக்காகவும் எனது வாழ்நாள் முழுவதும் என்னால் முடிந்தவரை சேவை செய்தேனோ, அந்தக் கொள்கைகளுக்கும் லட்சியங்களுக்குமான கவுரவமாகவும் இதனைக் கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, டெல்லியில் உள்ள அத்வானிக்கு அவரது மகள் பிரதிபா அத்வானி இனிப்பு ஊட்டினார். மேலும், அவரை அனைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதிபா அத்வானி, “விருது குறித்த அறிவிப்பை அடுத்து எனது தந்தை மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் அதிகம் பேசக் கூடியவர் அல்ல. ஆனால், அவரது கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. நாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அவர். இந்த தருணத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கும், நாட்டு மக்களுக்கும் நாங்கள் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் கூறினார்.

பிரதமர் மோடி புகழாரம்: முன்னதாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஸ்ரீ எல்.கே. அத்வானி ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நாட்டின் மிகப்பெரிய இந்த கவுரவம் குறித்து அத்வானியிடம் பேசி எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். நம் காலத்தில் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவராக, அத்வானி ஜி இந்தியாவின் வளர்ச்சிக்கு செய்த பங்களிப்பு மகத்தானது. அடிமட்ட தொண்டனில் தொடங்கி நமது நாட்டின் துணை பிரதமராக உயர்ந்தவர். உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு துறை அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றினார். அவரது நாடாளுமன்ற விவாதங்கள் முன்னுதாரணமாக இருந்துள்ளன.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை மேம்படுத்துவதற்கு இணையற்ற முயற்சிகளை மேற்கொண்டவர் அத்வானி. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட இந்த தருணம் எனக்கு மிகவும் உணர்ச்சி மிகுந்தது. அவருடன் பழகுவதற்கும், அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் எண்ணற்ற வாய்ப்புகள் கிடைத்ததை நான் எப்போதும் எனது பாக்கியமாகக் கருதுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் முழு விவரம்: எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது: தலைவர்கள் வாழ்த்து

கடந்து வந்த பாதை: பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியில் நீண்ட கால தலைவராக இருந்தவருமான லால் கிருஷ்ண அத்வானி. கடந்த 1927 ஆம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த இந்தியாவின், தற்போது பாகிஸ்தானின் பகுதியாக இருக்கும் கராச்சியில் பிறந்தார். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் இந்தியாவுக்கு வந்தது. இளம் வயதிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், பின்னர் ஜன சங்கத்திற்காக வேலை செய்தார்.

கடந்த 1980-ஆம் ஆண்டு பாஜகவை உருவக்கிய தலைவர்களில் அத்வானியும் ஒருவர். அதனைத் தொடர்ந்து வாஜ்பாயுடன் இணைந்து பாஜகவின் முகமாக நீண்டகாலம் அறியப்பட்டார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 1990-ல் அத்வானி நடத்திய ‘ரத யாத்திரை’ தேசிய அரசியலில் ஒரு முக்கியமான திருப்பு முனையாக அரசியல் விமர்சகர்களால் கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE