“பாஜக, ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு எதிராக போராடுவதுதான் நமது ஒரே இலக்கு” - ஜெய்ராம் ரமேஷ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “மாநில அளவில் நமக்கிடையே இருக்கும் மாற்றுக் கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தேசிய கண்ணோட்டத்தில் சிந்திக்க வேண்டும். பாஜக, ஆர்.எஸ்.எஸ் கொள்கைக்கு எதிராக போராடுவதுதான் நமது ஒரே இலக்கு” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மம்தாவின் கருத்துக்கு பதிலளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி - காங்கிரஸ் மோதல் நாளுக்கு நாள் வலுத்துவருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது, “மம்தா பானர்ஜி மனதில் எந்த சந்தேகமும் வரக்கூடாது. நாங்கள் நிச்சயமாக உத்தரப் பிரதேசத்துக்கு செல்வோம். பாரத் ஜோடோ நியாய யாத்ரா உத்தரப் பிரதேசத்தில் 11 நாட்கள் நடைபெறவிருக்கிறது.

மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சி பற்றி நிறைய விஷயங்களை கூறியுள்ளார் ஆனால் நான் தற்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை. நடக்க இருப்பது மக்களவை தேர்தல். சட்டப்பேரவை தேர்தல் கிடையாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மாநில அளவில் நமக்கிடையே இருக்கும் மாற்றுக் கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தேசிய கண்ணோட்டத்தில் சிந்திக்க வேண்டும். பாஜக, ஆர்.எஸ்.எஸ் கொள்கைக்கு எதிராக போராடுவதுதான் நமது ஒரே இலக்கு. இண்டியா கூட்டணியை பலப்படுத்த வேண்டியது நம் அனைவரது கடமை” என்றார்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை ஒரு தர்ணாவில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி பேசுகையில். “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்குவங்கத்தின் 6 மாவட்டங்களில் பயணித்துள்ளது. அது வெறும் போட்டோ ஷூட் வாய்ப்பு. மாநிலத்தில் சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரித்தாள்வதற்காக வந்த புலம்பெயர் பறவைகள் அவர்கள். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 300 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று நான் முன்மொழிந்தேன். ஆனால் அவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை. இப்போது இங்கு மேற்குவங்கத்தில் முஸ்லிம் வாக்குகளைக் குறிவைத்து பயணிக்கின்றனர். இப்போதைய நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் அவர்கள் 40 தொகுதிகளையாவது கைப்பற்றுவார்களா என்று சந்தேகப்படுகிறேன்.

நாங்கள் கூட்டணி விசயத்தை திறந்த மனதோடு தான் அணுகுகிறோம். அவர்களுக்கு 2 தொகுதிகள் தர முன்வந்தோம். ஆனால் அவர்கள் உடன்படவில்லை. இப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக எங்களுக்குள் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை. நாங்கள் இனி மேற்குவங்கத்தில் தனியாகப் போட்டியிட்டு பாஜகவை வீழ்த்துவோம்” என்று கூறியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE