கொல்கத்தா: ஜார்க்கண்ட மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “இது பாஜக ஆதரவு மத்திய அமைப்புகளின் பழிவாங்கும் செயல்” என்று விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள பதிவில், “சக்திவாய்ந்த ஒரு பழங்குடியினத் தலைவரான ஹேமந்த் சோரன் அநியாயமாக கைது செய்யப்பட்டிருப்பதற்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கிறேன். இது பாஜக ஆதரவு மத்திய அமைப்புகளின் பழிவாங்கும் செயல், வெகுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மதிப்பைக் குறைக்கும் திட்டமிட்ட சதி.
ஹேமந்த் சோரன் எனது நெருங்கிய நண்பர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் அவர் பக்கம் உறுதியாக நிற்பேன் என்று நான் சபதம் செய்கிறேன். இந்த முக்கியமான போரில் ஜார்க்கண்ட்டின் உறுதி மிக்க மக்கள் நிச்சம் பதிலடிகொடுப்பார்கள், வெற்றி பெறுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தற்போது நில மோசடி வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். தனது கைது நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன் வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், “நீங்கள் உயர் நீதிமன்றத்தில் ஏன் மனு தாக்கல் செய்யவில்லை?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “உயர் நீதிமன்றங்கள் அரசியலமைப்பு நீதிமன்றங்கள். இன்று நாம் ஒருவரை இதுபோன்று அனுமதித்தால், அனைவரையும் பின்னாளில் அனுமதிக்க வேண்டும். நீதிமன்றங்கள் அனைவருக்குமானது. எனவே உயர் நீதிமன்றத்தை நாடுங்கள்” என்று குறிப்பிட்டனர்.
அதே போல், ஹேமந்த் சோரன் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்று அறிவிக்க கோரும் மனுவினை விசாரித்து தீர்ப்பு வழங்க உயர் நீதிமன்றத்துக்கு காலக்கெடு விதிக்கும் கோரிக்கையை ஏற்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
பின்னணி: சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், கடந்த வாரம் முதல் முறையாக வீட்டிலேயே வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்றுமுன்தினம் (ஜன.31) பிற்பகலில் அமலாக்கத் துறை அதிகாரிகள் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் குவிக்கப்பட்டனர். ஆனால், ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத் துறை அலுவலகத்தை சுற்றி 100 மீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவப் படையினர், போலீஸார் குவிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணி முதல் ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேர விசாரணைக்குப் பிறகு, புதன்கிழமை (ஜன.31) இரவு 8.30 மணி அளவில் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து, தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.