ஹேமந்த் சோரன் ராஞ்சி மத்திய சிறையில் அடைப்பு: அடுத்து என்ன?

By செய்திப்பிரிவு

ராஞ்சி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை அளித்துள்ள மனு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், கடந்த வாரம் முதல் முறையாக வீட்டிலேயே வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜனவரி 28, 29-ம் தேதிகளில் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, ராஞ்சியில் விசாரணை நடத்துவதற்காக நேற்று பிற்பகலில் அமலாக்கத் துறை அதிகாரிகள் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் குவிக்கப்பட்டனர். ஆனால், ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத் துறை அலுவலகத்தை சுற்றி 100 மீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவ படையினர், போலீஸார் குவிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணி முதல் ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேர விசாரணைக்கு பிறகு, நேற்றிரவு 8.30 மணி அளவில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து, தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரிக்கும் PMLA நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தீர்ப்பை நிறுத்திவைத்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நாளை மீண்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஹேமந்த் சோரன், ராஞ்சியில் உள்ள ஹாட்வார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நாளை மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE