புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்களின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் பல பரிமாண வறுமையிலிருந்து விடுதலை பெற உதவியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்தியப் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் ஆழமான நேர்மறையான மாற்றத்தைக் கண்டுள்ளது. மக்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றபோது, பல்வேறு சவால்களை எதிர்கொண்ட நிலையில் நாடு இருந்தது. அந்த சவால்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரம் ஒரு புதிய வீரியத்தை பெற்றுள்ளது. அதோடு, வளர்ச்சியின் பலன்கள் அதிக அளவில் மக்களை சென்றடைந்துள்ளன.
இதன் காரணமாக, எங்கள் அரசு அது செய்துள்ள அற்புதமான பணியின் காரணமாக அற்புதமான ஆணையுடன் ஆசீர்வதிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இலவச ரேஷன், அனைவருக்கும் வங்கிக் கணக்கு, அனைவருக்கும் குடிநீர் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு தனிநபரையும் இலக்கு வைத்து வளர்ச்சித் திட்டங்கள் சென்றடைந்துள்ளன. இதன் மூலம் கிராமப்புறங்களில் உண்மையான வருமானம் அதிகரித்துள்ளது.
2047க்குள் நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்ற இலக்கை அடைய, மக்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். எங்கள் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, சமூக நீதி என்பது பயனுள்ள மற்றும் அவசியமான ஒன்று. தகுதியுடைய அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறையே சமூக நீதிக்கான உண்மையான மற்றும் விரிவான அணுகுமுறையாகும். சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் நன்மைகள் வழங்கப்படுகின்றன. எங்கள் அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. உண்மையான மதச்சார்பற்ற அரசு இது. சமூக-பொருளாதார மாற்றத்தை அடைய செலவினங்களில் கவனம் செலுத்தாமல் விளைவுகளில் கவனம் செலுத்துகிறோம்.
» மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 - முக்கிய அம்சங்கள்
» வாரணாசி நீதிமன்றம் அனுமதி: கியான்வாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபாடு
வறுமையைக் கையாள்வதற்கான முந்தைய அணுகுமுறை சுமாரான விளைவுகளையே ஏற்படுத்தியது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்களின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் பல பரிமாண வறுமையிலிருந்து விடுதலை பெற உதவியுள்ளோம். ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதன்மீது நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். நேரடி பணப் பரிமாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா கணக்குகள், 34 லட்சம் கோடி ரூபாய் சேமிப்புக்கு வழிவகுத்துள்ளது.
விவசாயிகளுக்கு அதிக அளவாக ரூ. 2.7 லட்சம் கோடி நிதி உதவியை அரசு வழங்கி உள்ளது. 78 லட்சம் தெருவோர வியாபாரிகளில் இருந்து 2.3 லட்சம் பேர் பிரதம மந்திரி ஸ்வாநிதி யோஜனா திட்டத்தின் கீழ் மூன்றாவது முறையாக கடன் பெற்றுள்ளனர். பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் கைவினைஞர்களுக்கு தொடக்கம் முதல் இறுதி வரையிலான ஆதரவை அளிக்கிறது. அதேபோல், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இந்த அரசாங்கம் யாரையும் விட்டுவிடாது என்பது நிரூபணமாகி இருக்கிறது.