“பிரதமர் மோடி ஒழுக்கமானவர். எனவே...” - கார்கே கிண்டல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடும் எம்.பிக்கள் குறித்து பிரதமர் மோடி புதன்கிழமை காலை விமர்சித்திருந்த நிலையில், “பிரதமர் மோடி மிகவும் ஒழுக்கமானவர், அவரின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கிண்டலாக பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, “நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம். எனவே, எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மனந்திரும்புவதற்கும் நேர்மறையான தடம் பதிப்பதற்கும் ஒரு வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம் என்று அனைத்து எம்பிக்களையும் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் சிறந்ததைச் செய்ய வேண்டும். 2024 மக்களவைத் தேர்தலுக்கு பின் எனது அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்” என்றார்.

இந்நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பிரதமர் மோடி ஒழுக்கமானவர், அவர் அனைத்து விதிகளையும், அரசியலமைப்பு சட்டத்தையும் பின்பற்றுகிறார். எனவே, அவருடைய ஆலோசனையை பின்பற்ற வேண்டும்” என கிண்டலாக பதிலளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE