பாட்னா: பிஹாரின் மெகா கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணியின் செயல்பாடுகள் அதிருப்தியளித்ததால், முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக அணியில் இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளார்.
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்த ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகள் ரோகினி ஆச்சார்யா, ‘‘குப்பை தொட்டிக்கு சென்றுவிட்டது குப்பை. அந்த அணியில் நாற்றம் அடிக்கட்டும்’’ என விமர்சித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை அன்றும், ரோகினி சர்ச்சைக்குரிய கருத்தை எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். பின்பு அந்த கருத்தை நீக்கினார். பின் இதுகுறித்து விளக்கம் அளித்த ராஷ்ட்ரிய ஜனதாதளம், ‘‘ரோகினியின் சமூக ஊடக கருத்துகள் பிரதமர் மோடியை பற்றியது. நிதிஷ் குமாரை பற்றியது அல்ல’’ எனக் கூறியது.
லாலு கட்சியை வாரிசு அரசியல் என சில நாட்களுக்கு முன் நிதிஷ் விமர்சித்தார். இதற்கு பதில் அளித்த ரோகினி, ‘‘கொள்கை ரீதியாக தடுமாறுபவர்கள் எல்லாம், சமதர்மத்தின் பாதுகாவலர்கள் என கூறி கொள்கின்றனர்’’ என நிதிஷ் குமாரை விமர்சித்திருந்தார்.