பாஜகவில் மீண்டும் இணைந்தார் ஜெகதீஷ் ஷெட்டர்: எம்எல்சி பதவி வழங்கியும் காங்கிரஸை விட்டு விலகினார்

By இரா.வினோத்


பெங்களூரு/புதுடெல்லி: கடந்த தேர்தலின்போது பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக மூத்த தலைவரும், முன்னாள்முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டருக்கு (67) பாஜக சார்பில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். ஹூப்ளி-தர்வாட்மத்திய தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து ஜெகதீஷ் ஷெட்டருக்கு காங்கிரஸ் மேலிடம் எம்எல்சி பதவி வழங்கியது. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அவர் மீண்டும் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தன்னை மீண்டும்கட்சியில் இணைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பாஜகவில் மீண்டும் இணைந்தார்.

பின்னர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், '' அடிப்படையில் நான் ஆர்எஸ்எஸ் சேவகன். கொள்கை ரீதியாக எப்போதும் பாஜக தொண்டன். எனது உழைப்புக்கு ஏற்ற பதவிகளை பாஜக மேலிடம் எனக்குவழங்கியது. சில பிரச்சினையால் கட்சியில் இருந்து விலகினேன். மீண்டும் பாஜகவில் இணையுமாறு எடியூரப்பா, விஜயேந்திரா ஆகியோர் அழைப்பு விடுத்தனர். அதனால் மீண்டும் என் தாய் வீட்டுக்கு திரும்பியுள்ளேன்''என்றார்.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''பாஜக மேலிடத்தால் அவமதிக்கப்பட்ட ஜெகதீஷ் ஷெட்டருக்கு காங்கிரஸில் சீட் கொடுத்தோம். தேர்தலில் தோற்ற பின்னரும், அவருக்கு எம்எல்சி பதவி கொடுத்தோம். அவரை மரியாதையோடு நடத்திய காங்கிரஸை ஏமாற்றிவிட்டார்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE