அயோத்தியில் பால ராமர் கண் திறந்தார் - கோயில் கருவறையில் சிறப்பு பூஜைகள் செய்தார் பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற்றது. பால ராமர் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதமர் நரேந்திர மோடி கருவறையில் பூஜை செய்தார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2019 நவம்பரில் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, 2020 ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, கோயில் கட்டுமான பணிகளை விரைவாக மேற்கொண்டது.

கோயில் வளாகம் சுமார் 72 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 2.7 ஏக்கரில் நாகரா கட்டுமான கலையில் 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம் என 161 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

5.50 லட்சம் மந்திரங்கள்: அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22-ம் தேதி திறக்கப்படும் என்று தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தது. இதையொட்டி, கோயிலில் கடந்த 16-ம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கப்பட்டன. 7 நாட்களில் 5.50 லட்சம் மந்திரங்கள் ஓதப்பட்டன. கர்நாடகாவின் மைசூருவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய பால ராமர் சிலை கடந்த 19-ம் தேதி கோயில் கருவறையில் நிறுவப்பட்டது.

இதற்கிடையே, பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக, 11 நாள் விரதத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி தொடங்கினார். தமிழகத்தில் ராமேசுவரம், தனுஷ்கோடி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராமாயணம் தொடர்புடைய பல்வேறு புனித தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேற்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது. பிரதமர் மோடி காலை 10.30 மணி அளவில் அயோத்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கோயில் வளாகத்துக்கு வந்தார்.

பகல் 12.10 மணி அளவில் பால ராமருக்கான வஸ்திரம், வெள்ளி குடை ஆகியவற்றை தாம்பாளத்தில் ஏந்தியபடி கோயிலுக்குள் நுழைந்தார். கோயில் கருவறைக்குள் சென்று சங்கல்ப பூஜை செய்தார். உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ் உள்ளிட்டோரும் பூஜையில் பங்கேற்றனர். வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, பிரதமர் மோடி அனைத்து பூஜை, வழிபாடுகளையும் செய்தார்.

மதியம் 12.29 மணி முதல் 12.45 மணிக்குள் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பால ராமர் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதைத் தொடர்ந்து, பால ராமரின் பாதத்தை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். இதன்பிறகு சுவாமி கோவிந்த் தேவ் வழங்கிய புனித நீரை பருகிய பிரதமர் மோடி, 11 நாள் விரதத்தை நிறைவு செய்தார்.

வெள்ளியில் தயாரிக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் மாதிரியை பிரதமருக்கு பரிசாக முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கினார். பிறகு, விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களை பிரதமர் மோடி சந்தித்தார். கோயில் கட்டுமான தொழிலாளர்கள் மீதுமலர் தூவி வாழ்த்தினார்.

அம்பானி, அமிதாப், ரஜினி: தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா, சுனில் பார்தி மிட்டல், லட்சுமி மிட்டல், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அனுபம் கெர், சுமன், அபிஷேக் பச்சன், ராம்சரண், தனுஷ், மாதுரி தீட்சித், கங்கணா ரனாவத், ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கவுஷல், கேத்ரினா கைஃப், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாடகர்கள் சங்கர் மகாதேவன், ஹரிஹரன் என ஏராளமான முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி, நேபாளத்தில் சீதாதேவி பிறந்த ஜனக்பூரில் 1 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன. அமெரிக்காவில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பூஜைகள் நடைபெற்றன. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காவி கொடிகளுடன் பிரம்மாண்ட வாகன பேரணி நடத்தப்பட்டது. கனடாவில் உள்ள இந்து கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈபிள் டவர் முன்பு பெருந்திரளான இந்துக்கள் குவிந்து ராமர் கோயில் திறப்பு விழாவை கொண்டாடினர்.

மொரிஷியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸில் அந்த நாட்டு பிரதமர் பிரவிந்த் குமார், சிறப்பு பூஜை, வழிபாடுகளை நடத்தினார். இலங்கை, இந்தோனேசியா, தைவான், மெக்சிகோ, கென்யா, தான்சானியா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளிலும், பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோயில்களிலும் ராமர் கோயில் திறப்பு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் தொலைக்காட்சி சேனல்கள், இணையதளங்கள் மற்றும் பிரம்மாண்ட திரைகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை கோடிக்கணக்கான மக்கள் பரவசத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.

ஒளிமயமான எதிர்காலம்: பிரதமர் மோடி உற்சாகம்: பிரதிஷ்டை நிகழ்வை தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பகவான் ராமர் இருக்கிறார். ஆனால் அவருக்கு கோயில் கட்ட பல ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்த வேண்டிய சூழல் எழுந்தது. இந்த நேரத்தில் இந்திய நீதித் துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராமர் கோயில் கட்ட பல்வேறு தியாகங்களை செய்த கரசேவகர்கள், துறவிகளுக்கு நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். பல நூற்றாண்டு பொறுமை, தியாகம், தவத்தின் பயனாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பால ராமர் இனிமேல் கூடாரத்தில் இருக்க தேவையில்லை. அவர் இப்போது புதிய கோயிலில் வாழ்கிறார்.

‘‘என்னை மன்னித்துவிடுங்கள்' என்று பகவான் ராமரிடம் வேண்டிக் கொள்கிறேன். கடந்த காலத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நமது முயற்சிகள் போதுமானதாக இல்லை என்று கருதுகிறேன். ஏதோ ஒரு குறையால் நம் கனவுநிறைவேறாமலே இருந்தது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு,அயோத்தியில் பிரம்மாண்ட கோயில் கட்டி முடித்துவிட்டோம். அடுத்து, பாரதத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். வலுவான, வளமான, ஆன்மிக பூமியாக பாரதத்தை கட்டி எழுப்ப வேண்டும். தமிழகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் கடந்த 21-ம் தேதி மலர்தூவி வழிபாடு நடத்தினேன். அதுமுதல் ஒளிமயமான காலம் தொடங்கிவிட்டதாக கருதுகிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்