அயோத்தி விழா | கோயில்களில் நேரலை ஒளிபரப்புக்கு அனுமதி மறுக்கக்கூடாது: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை தமிழகத்தில் உள்ள கோயில்களில் நேரலையாக ஒளிபரப்ப அனுமதி மறுக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான பொது நல வழக்கு தமிழக பாஜக செயலாளர் வினோஜ் பி செல்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. வினோஜ் பி செல்வம் சார்பில் வழக்கறிஞர் ஜி.பாலாஜி இந்த மனுவை தாக்கல் செய்தார்.

மனுவில், "அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவை தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் நேரலையாக ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. அதோடு, அனைத்து வகையான பூஜைகள், அர்ச்சனைகள், அன்னதானம், பஜனை ஆகியவற்றுக்கும் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. மாநில அரசு காவல்துறை மூலம் தன்னிச்சையாக இதுபோன்று தடை விதிப்பது, இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “பிற மதத்தவர்கள் அருகில் வசிக்கிறார்கள் என்ற ஒற்றைக் காரணத்தைச் சொல்லி கோயில்களில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பை தடை செய்யக் கூடாது. விண்ணப்பித்தவர்கள் குறித்த தகவல்களை அரசு பராமரிக்க வேண்டும். விண்ணப்பத்தின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை கோயில்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டி இருந்தார். மேலும், இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை நேரலையாக ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட ராமர் கோயில்கள் உள்ளன.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜையோ, பஜனையோ, பிரசாதமோ, அன்னதானமோ நடத்தப்படுவதில்லை. தனியார் கோயில்களிலும் போலீசார் இதற்கு தடை விதிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை செய்யும் ஏற்பாட்டாளர்களை போலீசார் அச்சுறுத்துகின்றனர்” என குற்றம் சாட்டி இருந்தார். இதனிடையே, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை நேரலையில் ஒளிபரப்ப தடை ஏதும் விதிக்கப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE