ராமர் கோயில் கட்ட இரும்பு பயன்படுத்தவில்லை - ராம ஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளை விளக்கம்

By செய்திப்பிரிவு

அயோத்தி: உத்தர பிரதேசம், அயோத்தியில் குஜராத்தின் சோம்புரா குடும்பத்தை சேர்ந்த சந்திரகாந்த் சோம்புரா தலைமையில் ராமர் கோயில் கட்டப்டுகிறது. எல் அண்ட் டி, டாடா கன்சல்டிங் இன்ஜினீயர்ஸ் லிமிடெட் உட்பட பல்வேறு கட்டுமான நிறுவனங்கள், அரசு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் கோயில் கட்டுமானத்தில் பங்கேற்றுள்ளன.

இதுதொடர்பாக ராம ஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளையின் கட்டுமான கமிட்டியின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறியதாவது: அயோத்தி ராமர் கோயில் 57,000 சதுர அடி பரப்பளவில் 3 மாடிகள் கொண்டதாக கட்டப்படுகிறது. இதில் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதில் உருக்கு பயன்படுத்தப்பட்டது.

இரும்பின் ஆயுள்காலம் 90ஆண்டு வரை மட்டுமே நீடித்திருக்கும். எனவே நீடித்து உழைக்கும் உருக்கை கட்டுமானத்துக்கு பயன்படுத்தி உள்ளோம். இந்திய உருக்குஆணையத்தின் பிலாய் ஆலையில் தயாரிக்கப்பட்ட உருக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

அயோத்தி ராமர் கோயில் சரயுநதிக்கரையில் அமைந்திருக்கிறது. இதனால் இப்பகுதி மண்ணின் உறுதித்தன்மை பலவீனமாக உள்ளது. சென்னை ஐஐடி நிபுணர்களின் ஆலோசனைப்படி 15 மீட்டர் ஆழத்துக்கு அஸ்திவாரம் தோண்டி மண்ணை அகற்றினோம். பின்னர் ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட மணலை 14 அடுக்குகளாக நிரப்பினோம். இது கடினமான பாறைக்கு ஒப்பாக மாறியிருக்கிறது.

ராஜஸ்தானின் மக்ரானா பகுதிமார்பிள் கற்களில் தாஜ்மஹால் கட்டப்பட்டு உள்ளது. அதே பகுதி மார்பிள் கற்களில் ராமர் கோயில் கருவறை கட்டப்பட்டுள்ளது.

ரிக்டர் அலகில் 6.5 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டால்கூட கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சுமார் 2,500 ஆண்டுகள் வரை கோயில் நிலைத்திருக்கும். 1,000 ஆண்டுகள் வரை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. இவ்வாறு நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தார்.

கோயில் கட்டுமான பணிக்கு தலைமையேற்றுள்ள சோம்புரா கூறும்போது, “கடந்த 15 தலைமுறைகளாக கோயில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை 100-க்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி உள்ளோம். அயோத்தி ராமர் கோயில் இன்ஜினீயரிங் அதிசயமாக திகழும். பூமியில் இதுபோன்ற கட்டுமான அமைப்பை பார்க்க முடியாது’’ என்று தெரிவித்தார்.

3 மாடி கொண்ட ராமர் கோயில் முதல் தளத்தில் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE