2016-ல் மாயமான விமானம்: சென்னை கடற்கரையில் இருந்து 310 கி.மீ தொலைவில் பாகங்கள் கண்டுபிடிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 2016-ம் ஆண்டு தமிழக தலைநகர் சென்னையில் இருந்து அந்தமான் தலைநகர் போர் பிளேர் சென்ற An-32 விமானம் வங்காள விரிகுடா மீது பறந்தபோது மாயமானது. அந்த விமானம் தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட 42 நிமிடங்களில் ரேடார் டிராக்கிங் பார்வையில் இருந்து மறைந்தது. இந்த சூழலில் தற்போது சென்னை கடற்கரையில் இருந்து சுமார் 310 கி.மீ தொலைவில் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.

சென்னையில் இயங்கி வரும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆழ்கடல் பகுதியில் ‘சொனார்’ டெக்னிக் மூலம் An-32 விமானத்தின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனை படம் பிடித்து புவி அறிவியல் அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து விமானப்படைக்கு அந்த படங்கள் சென்றுள்ளன. அதன் பிறகு அது மாயமான An-32 விமானத்தின் பாகங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை கடற்கரையில் இருந்து 140 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில், கடலுக்கு அடியில் சுமார் 11,200 அடி ஆழத்தில் An-32 விமானத்தின் பாகங்கள் இருந்துள்ளன. கடந்த 2016, ஜூலை 22-ம் தேதி இந்த விமானம் மாயமானது. அதில் சுமார் 29 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

An-32 விமானம்: பல்வேறு உலக நாடுகள் தங்களது ராணுவ பயன்பாட்டுக்காக இந்த விமானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதில் இந்தியாவும் அடங்கும். உக்ரைன் நாட்டை சேர்ந்த ஏவியன்ட் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. கடந்த 1980 முதல் 2012 வரை இந்த விமானம் தயாரிக்கப்பட்டது. இரட்டை என்ஜின் கொண்ட இந்த விமானம் மோசமான வானிலையிலும் இயங்கக் கூடிய தன்மை கொண்டது என சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE