ஆர்எஸ்எஸ், பாஜக நடத்தும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் சோனியா, கார்கே பங்கேற்க மாட்டார்கள்: காங்கிரஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவால் நடத்தப்படும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் 22-ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் கடந்த மாதம் பெற்றனர்.

நமது நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ராமரை வழிபடுகிறார்கள். மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் அயோத்தியில் கோயில் என்ற அரசியல் திட்டத்தை நீண்ட காலமாக உருவாக்கி வருகின்றன. தேர்தல் ஆதாயத்துக்காகவே முழுமையடையாத கோயிலை திறந்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குக் கட்டுப்பட்டும், ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜன. 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அயோத்தியில் சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையம் என ரூ.15,700 கோடி மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அயோத்தியில் ரூ.1,463 கோடியில் கட்டப்பட்டுள்ள மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தையும், ராமர் கோயிலுக்குச் செல்வதற்காக அகலப்படுத்தப்பட்ட ராம்பாத், பக்திபாத், தரம்பாத், ஸ்ரீராம் ஜென்மபூமி பாத் ஆகிய 4 சாலைகளையும் சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பின்னர் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசும்போது, “550 ஆண்டுகால காத்திருப்பு, வேதனைக்கு இப்போது விடிவுகாலம் பிறந்துள்ளது. ஜன. 22-ல்நடைபெறும் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக உலகம்முழுவதும் வாழும் இந்துக்களுடன், நானும் பேராவலோடு காத்திருக்கிறேன்.

அன்றைய விழாவில் அனைவரும் பங்கேற்பது சாத்தியமில்லை. எனவே, அன்று அயோத்திக்கு வர முயற்சி செய்வதற்குப் பதிலாக, கும்பாபிஷேகத்தின்போது 140 கோடி இந்தியர்களும் அவரவர் வீட்டில் தீபம் ஏற்றிவழிபட வேண்டும். அந்த நாளை தீபாவளியைப் போல பெரிய பண்டிகையாக கொண்டாட வேண்டும்.கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அயோத்திக்கு வந்து ராமரை கண்குளிர வழிபடலாம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அயோத்தியில் குழந்தை ராமர் தங்க நிரந்தரக் கோயில் கட்டப்பட்டுள்ளது” என்று பேசியது நினைவுகூரத்தக்கது.

இதனிடையே, ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE