புதுடெல்லி: ராமர் கோயில் திறப்பு விழா ஏற்பாடுகள் பார்க்கும்போது பாஜக ஸ்பான்ஸர் செய்யும் நிகழ்வு போல உள்ளது என ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“பகவான் ராமர் அனைவருக்குமானவர். எல்லோரும் அவரது பக்தர்கள் தான். ஆனால், நடப்பதை பார்த்தால் இந்த நிகழ்வுக்கு பாஜக ஸ்பான்ஸர் செய்வது போல உள்ளது. இதன் மூலம் தேர்தலில் வெற்றி நோக்கிலான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது” என அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்படும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக் குழு மேற்கொண்டு வருகிறது. இதில் பிரதமர் மோடி, அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், சாதுக்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்க உள்ளனர். அதற்கு தகுந்த வகையில் அயோத்தி நகரத்தில் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.