“பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் வலுவான தீர்ப்பு” - மம்தா வரவேற்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியிருக்கும் நிலையில், “இந்த வலுவானதும், துணிச்சல் மிக்கதுமான தீர்ப்பை வழங்கியதற்காக நான் உச்ச நீதிமன்றத்துக்கு நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பில்கிஸ் பானுவின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட குஜராத் அரசின் முடிவை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம். மேலும் இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இது குறித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசும்போது, “வலுவானதும், துணிச்சல் மிக்கதுமான தீர்ப்பை அளித்ததற்கு நான் உச்ச நீதிமன்றத்துக்கு நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன். இந்த வழக்கானது வன்கொடுமை செய்தவர்கள் சுதந்திரமாகவும், அதிகாரத்தை அனுபவிப்பதையும் காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ஓவைசி இது குறித்து கூறும்போது, “பாஜக மத்தியிலும்,மாநிலத்திலும் பெண்களிடம் தோல்வியடைந்துள்ளது. பில்கிஸ் பானு மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பிரதமர் மோடியும், பாஜகவும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE