டெல்லியில் வாட்டி வதைக்கும் குளிர்: ஜன.12 வரை நர்சரி பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு - அமைச்சர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புது டெல்லி: டெல்லியில் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில் நர்சரி முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அடுத்த 5 நாட்களுக்கு மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “குளிர் கடுமையாக இருப்பதன் காரணமாக டெல்லியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான நர்சரி பள்ளிகள் அடுத்த 5 நாட்களுக்கு மூடப்படும்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக டெல்லியில் வாட்டி வதைக்கும் குளிர் காரணமாக கடந்த 1-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டு திங்கள்கிழமை (ஜன.8) திறக்கப்பட இருந்தது. ஆனால் குளிரின் தாக்கம் குறையாத காரணத்தால் இந்த விடுமுறையானது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கவுதம்புத் நகரில் மாவட்ட நிர்வாகம் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜன.14 வரை விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமையான நேற்று (ஜன.6) டெல்லி அரசு சார்பில் குளிர்கால விடுமுறை முடிந்து பள்ளிகள் 10-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு சில மணிநேரங்களில் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. அதில், ‘தவறாக வெளியிடப்பட்டது’ என பள்ளி கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்திருந்தது.

டெல்லியில் வதைக்கும் குளிர்: டெல்லி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக குளிர் வாட்டி வதைக்கிறது. வெப்பநிலை இயல்பைவிட குறைந்துள்ள நிலையில் சாலை முழுவதும் பனியால் போர்த்தப்பட்டு காணப்படுகிறது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம், “பஞ்சாப், ஹரியானா, டெல்லி, சத்தீஸ்கர், ராஜஸ்தான் பகுதிகளில் நிலவி வரும் குளிரானது கடுமையான குளிராக மாறி அடுத்த 2 நாட்களுக்கு இதே நிலை தொடரும். பின்னர் படிப்படியாக குறையும்” எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE