“அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை” - சரத் பவார் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார்.

புதிய மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரம் டெல்லி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, "டெல்லி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கேஜ்ரிவாலுக்கு வாக்களித்துள்ளனர். தற்போது ஆம் ஆத்மி அமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான விசாரணைக்காக ஆஜராக அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. மத்திய அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது. அவர் ஒரு நாட்டுடைய தலைநகரின் முதல்வர். அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு நேர்மையான எளிய மனிதர் (simple man with a clean image) என்பது டெல்லியில் உள்ள அனைவருக்கும் தெரியும். அவர் கைது செய்யப்பட்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

பின்னணி என்ன: புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையின் சம்மன்களுக்கு ஆஜராகாததால் எந்த நேரத்திலும் கைது அவர் செய்யப்படலாம் என சலசலக்கப்பட்டு வருகிறது.

கேஜ்ரிவால் இது குறித்து பேசியதாவது , “கடந்த இரண்டு ஆண்டுகளில் மதுபானக் கொள்கை ஊழல் பற்றி நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த இரண்டு வருடங்களில் பாஜகவின் அனைத்து ஏஜென்சிகளும் பல ரெய்டுகளை நடத்தி பலரை கைது செய்தாலும் ஒரு பைசா ஊழலை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மையில் ஊழல் நடந்திருந்தால், அத்தனை கோடிகளும் எங்கே போயின? பணமெல்லாம் காற்றில் மாயமாகிவிட்டதா?. ஊழல் நடக்கவில்லை என்பதுதான் உண்மை.

மதுபானக் கொள்கை வழக்கில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. மக்களவைத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய முடியாத வகையில் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. பாஜக இப்போது என்னைக் கைது செய்ய விரும்புகிறது. எனது மிக முக்கியமான சொத்து, மூலதனம், பலம் அனைத்துமே எனது நேர்மைதான். ஆனால், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், சட்டவிரோத சம்மன்களை அனுப்புவதன் மூலமும் பாஜக என்னை இழிவுபடுத்த விரும்புகிறது, என் நேர்மையைக் கெடுக்க விரும்புகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE