“அசைவம் உண்பவர்” - கடவுள் ராமர் குறித்து என்சிபி எம்எல்ஏ ஜிதேந்திர அவாத் சர்ச்சை கருத்து: பாஜக எதிர்வினை

By செய்திப்பிரிவு

அஹமத்நகர் (மகாராஷ்டிரா): கடவுள் ராமர் வெகுஜன தலைவன், அசைவம் உண்பவர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் (சரத் பவார் அணி) சேர்ந்த எம்எல்ஏ ஜிதேந்திர அவாத் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22 ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது மகாராஷ்டிராவில் அன்று ஒருநாள் மட்டும் மது மற்றும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ ராம் கதம் அம்மாநில அரசிடம் நேற்று வலியுத்திய நிலையில் ஜித்தேந்ர அவ்ஹத் இன்று அதற்கு எதிர்வினையாற்றியுள்ளார்.

மகாராஷ்டிராவின் ஷீரிடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜிதேந்திர அவாத், “ராமர் நம்முடையர். அவர் வெகுஜனங்களில் தலைவர். அவர் நம்மைப் போல உணவுப் பழக்கம் கொண்டவர். கானகத்தில் அவர் வேட்டையாடி உணவருந்தியர். நீங்கள் எங்களை எல்லாம் சைவம் உண்பவர்களாக மாற்ற முயலும்போது, நாங்கள் ராமரின் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறோம். அதனால் இன்று ஆட்டிறைச்சி சாப்பிடுகிறோம். இதுதான் ராமனின் கோட்பாடு. ராமர் சைவம் சாப்பிட்டவரில்லை. அவர் அசைவம் உண்டவர். 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தவர் எங்கே சென்று சைவ உணவைத் தேடியிருப்பார். நான் சொல்வது சரியா, தவறா?" என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கேட்டார்.

மேலும் அவர் பேசுகையில், “யார் என்ன சொன்னாலும் மகாத்மா காந்தியாலும் ஜவஹர்லால் நேருவாலும் தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. காந்திஜி 1947-ல் கொல்லப்படும் முன்பாக முதன்முதலாக அவர் மீது 1935-ம் ஆண்டு தாக்குதல் நடந்தது. இரண்டாவது தாக்குதல் 1938-லும், மூன்றாவது தாக்குதல் 1942-லும் நடந்தன. எதற்காக அவர் மீது இத்தனை தாக்குதல் முயற்சிகள் நடத்தப்பட்டன. அவர்கள் காலத்தைப் பற்றி கவலைப்படவில்லை. சட்டத்தைப் பற்றி கவலைப்படவில்லை. காந்திஜி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வளவு பெரிய விடுதலை இயக்கத்தின் தலைவராக (காந்தி) ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்டவர் இருப்பதை அவர்களால் (ஆர்எஸ்எஸ்) ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காந்தியின் கொலைக்கு பின்னால் இருந்த ஒரே காரணம் சாதியே. மக்களாகிய நீங்கள் இந்த வரலாறுகளை வாசிப்பதும் இல்லை. மனதில் வைத்துக்கொள்வதும் இல்லை” என்றார்.

பாஜக தாக்கு: ஜிதேந்திர அவாத்தின் ராமர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பாஜக எம்எல்ஏ ராம் கதம் பதிலடி கொடுத்துள்ளார். “மறைந்த பாலாசாகேப் மட்டும் இப்போது உயிருடன் இருந்திருந்தால், அவர்களின் சாம்னா பத்திரிக்கை ராமர் அசைவம் உண்பவர் என்று பேசியவர்களுக்கு எதிராக கடுமையாக பேசியிருக்கும். ஆனால் இன்றைய எதார்த்தம் என்ன? யார் வேண்டுமானாலும் ராமரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம். இந்துக்களை யார் வேண்டுமானாலும் கேலி செய்யலாம். அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. பனிக்கட்டியைப் போல மவுனமாக இருக்கிறார்கள். ஆனால் தேர்தல் நேரத்தில் மட்டும் இந்துத்துவா பற்றி பேசி போலியான சக்தியை திரட்டுகிறார்கள்” என்று அவர் எதிர்வினையாற்றியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE