கைது அச்சத்துக்கு மத்தியில் குஜராத் சுற்றுப்பயணம் செல்லும் அரவிந்த் கேஜ்ரிவால்?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமலாக்கத் துறையின் கைது அச்சத்துக்கு மத்தியில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் குஜராத் செல்லவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 6,7,8 என மூன்று நாட்கள் குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு குஜராத் செல்லும் கேஜ்ரிவால் அங்கு ஆம் ஆத்மி சார்பில் தொழிலாளர் மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏ சைத்ரா பசவாவையும் அவரது குடும்பத்தினரையும் கேஜ்ரிவால் சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையின் 3 சம்மனுக்கும் ஆஜராகாததால் அரவிந்த் கேஜ்ரிவால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகரகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

டெல்லி சட்டம், பொதுப்பணித் துறை அமைச்சர் அதிஷி, "நாளை (வியாழன்) காலை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தலாம் எனத் தகவல்கள் கிடைத்துள்ளது. கைது செய்யப்பட வாய்ப்புள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல் டெல்லி சுகாதார அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் நேற்றிரவு 11.52 மணிக்கு பதிவு செய்த ட்வீட்டில், "நாளை (வியாழன்) காலை முதல்வர் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்துகிறது. கைது செய்யப்பட வாய்ப்பு" என்று பதிவிட்டுள்ளார். இதுபோல் அக்கட்சிப் பிரமுகர்கள் பலரும் இதே அச்சத்தை வெளிப்படுத்தி சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வரும் நிலையில் கேஜ்ரிவாலின் குஜராத் சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டு வருகிறது.

டெல்லி காவல்துறை மறுப்பு: கைது அச்சத்துக்கு மத்தியில், டெல்லி காவல்துறை கேஜ்ரிவாலின் வீட்டுக்கு சீல் வைத்துள்ளதுடன், அவரின் வீட்டுக்கு செல்லும் அனைத்து பாதைகளையும் அடைத்து, முதல்வர் மாளிகை ஊழியர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து வருகிறது என்றும், அவரை கைது செய்யும் பொருட்டு டெல்லி காவல்துறை இவ்வாறு செய்கிறது என்று ஆம் ஆத்மி குற்றச்சாட்டு தெரிவித்திருந்தது. ஆனால், இதனை மறுத்துள்ள டெல்லி காவல்துறை, புதன்கிழமை முதல் கேஜ்ரிவால் வீட்டின் முன் கூடியிருந்த ஊடகவியலாளர்களை ஒழுங்குபடுத்தும் பொருட்டு அவரின் வீட்டின் முன் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் முதல்வர் மாளிகை ஊழியர்கள் யாரும் காவல்துறையால் தடைசெய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி: டெல்லி அரசு, மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக 2021-22 நிதியாண்டுக்கான புதிய மதுக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை 2 குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதுவரை டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்து செய்யப்பட்ட மதுபான கொள்கை மூலம் கிடைத்த ரூ.100 கோடி லஞ்சப் பணத்தை, அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிகட்சி கோவாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக ஒரு குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தனி உதவியாளரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் முதல்வர் கேஜ்ரிவால் மூன்று சம்மன்களுக்கும் ஆஜராகாததால் அவர் கைது செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE