அயோத்தி மீரா மாஞ்சி குடும்பத்தினருக்கு கடிதத்துடன் பரிசுப் பொருட்கள் அனுப்பி வைத்த பிரதமர்

By செய்திப்பிரிவு

அயோத்தி: உஜ்வாலா திட்டத்தின் 10 கோடியாவது பயனாளியான மீரா மாஞ்சியின் வீட்டுக்கு திடீர் வருகையைத் தொடர்ந்து, அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பரிசுப் பொருட்களும், கடிதமும் அனுப்பியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

மீரா மாஞ்சியின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி அனுப்பியுள்ள பரிசுகளில் ஒரு தேநீர் தயாரிக்கும் பாத்திர செட், ஓவிய புத்தகம், கலர் பென்சில்கள் இன்னும் பிற பொருட்களுடன் பிரதமரின் படமும் இருந்தன. பிரதமர் எழுதியிருந்த கடிதத்தில் மீரா மாஞ்சி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். மேலும் அக்கடித்தில் பிரதமர், “கடவுள் ராமரின் புனித நகரமான அயோத்தி வருகையின் போது உங்களது வீட்டிற்கு வந்து, நீங்கள் தயாரித்துக் கொடுத்த தேநீர் பருகியது மிகவும் பரவசமான ஒன்று. அயோத்தியில் இருந்து வந்த பின்னர் பல்வேறு தொலைக்காட்சிகளில் உங்களுடைய பேட்டியை பார்த்தேன். உங்களின் நம்பிக்கை மற்றும் உங்கள் குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உங்களின் அனுபவங்களை மிகவும் எளிய முறையில் நீங்கள் பகிர்ந்தது நன்றாக இருந்தது.

உங்களைப் போன்ற கோடிக்கணக்கான எனது குடும்ப உறுப்பினர்களின் முகத்தில் தோன்றும் இந்தப் புன்னகைதான் எனது மூலதனம், என்னுடயை முழு திருப்தி, இந்த நாட்டுக்காக முழு மனதுடன் உழைக்கத் தூண்டும் புதிய உந்து சக்தி. உஜ்வாலா திட்டத்தின் 10 கோடியாவது பயனாளியாக நீங்கள் (மீரா) இருப்பது வெறும் எண் மட்டும் இல்லை. மாறாக, இந்த நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்களின் கனவுகள்,அ தீர்மானங்கள் நிறைவடைந்ததாகவே நான் பார்க்கிறேன்.

மகத்தான மற்றும் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் உங்களைப் போன்ற லட்சக்கணக்கான மக்களின் விருப்பங்கள் அடங்கியிருக்கும் அமிர்த காலத்தில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது" என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக உத்தரப் பிரதேசத்தின்அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடாக அயோத்தியில் 240 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தையும், 1,450 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி டிச.30 ஆம் தேதி(சனிக்கிழமை) திறந்து வைத்தார். அப்போது அவர், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் 10 கோடியாவது பயனாளியான மீரா மாஞ்சியின் இல்லத்துக்குச் சென்றதையும், அங்கே அவர் தேநீர் அருந்திய வீடியோவையும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து மீரா மாஞ்சி ஊடகப் பேட்டி ஒன்றில், “பிரதமர் என் வீட்டுக்கு வருவார் என்பது தெரியாது. அவர் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் என்னிடம் காவல் துறையினர் அரசியல் பிரமுகர் ஒருவர் உங்கள் வீட்டுக்கு வரப்போகிறார் என்று கூறினார். அவர் வந்த பின்னர் தான் எனக்கு அந்த விஷயமே தெரிந்தது. அவர் என்னிடமும் எனது குடும்ப உறுப்பினரிடமும் பேசினார்.

உஜ்வாலா திட்டத்தால் நான் பெற்ற பலன்கள் குறித்து கேட்டறிந்தார். நான் என்ன சமைத்தேன் என்று வினவினார். நான் சாதமும், பருப்பும், காய்கறிகளும் சமைத்திருப்பதாகச் சொன்னேன். அவர் எங்கள் வீட்டில் தேநீர் அருந்தினார். தேநீரில் சர்க்கரை சற்று அதிகமாக இருப்பதாகக் கூறினார். எப்போதுமே இனிப்பு சற்று தூக்கலாக இடுவதே என் வழக்கம் என்று கூறினேன்” என்று தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE