கர்னி சேனா தலைவர் கொலை வழக்கு: ராஜஸ்தான், ஹரியாணாவில் 31 இடங்களில் என்ஐஏ சோதனை 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களில் 31 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்படும் ராஷ்ட்ரீய ரஜபுத்திர கர்னி சேனா பிரிவின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி. இவர் கடந்த டிசம்பர் 5-ம் தேதி ஜெய்ப்பூரில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இக்கொலைச் சம்பவத்தில் வன்முறை கும்பல்களின் தொடர்பு இருப்பதால், மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்தது. வழக்கு ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தேக நபர்களிடம் என்ஐஏ விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த கொலைத் தொடர்பாக டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். முதல்கட்ட விசாரணையில் சுக்தேவை சுட்டுக் கொலை செய்த மர்ம நபர்கள், ஹரியாணாவை சேர்ந்த நிதின், ராஜஸ்தானை சேர்ந்த ரோகித் ரத்தோட் என்பது தெரிய வந்தது. இந்தச் சூழலில் நிதினும், ரோகித்தும் தங்க இடம் அளித்த ரம்வீர் சிங் என்பவர் டிச.9-ம் தேதி ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் உள்ள விடுதியில் பதுங்கியிருந்த நிதின், ரோகித் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு துணையாக இருந்த உத்தம் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து ராஜஸ்தான் போலீஸார் கூறியதாவது: கர்னி சேனா தலைவர் சுக்தேவ் கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருக்கிறது. அந்த கும்பலை சேர்ந்த ரோகித் கடோரா வெளிநாட்டில் பதுங்கி உள்ளார். அவரது உத்தரவின்பேரில் நிதினும் ரோகித் ரத்தோட்டும் சேர்ந்து சுக்தேவை கொலை செய்துள்ளனர். கொலையாளி ரோகித் ரத்தோட் - கர்னி சேனா தலைவர் சுக்தேவ் இடையே ஏற்கெனவே முன்பகை இருந்துள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் ரோகித் ரத்தோட் சிறை செல்ல சுக்தேவ் காரணமாக இருந்துள்ளார்.

இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் நிதின் என்பவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். வெளிநாட்டில் பதுங்கியுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ரோகித் கடோரா குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். முழுமையான விசாரணைக்குப் பிறகே கொலைக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்று தெரிவித்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE