மணிப்பூரில் 3 பேர் சுட்டுக் கொலை: ஊரடங்கு அமல்

By செய்திப்பிரிவு

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய சிலர் இந்த குற்ற செயலை அரங்கேற்றியுள்ளனர். இந்த சம்பவம் தௌபால் மாவட்டத்தில் உள்ள லிலாங் பகுதியில் நடந்துள்ளது. அதையடுத்து தௌபால், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களில் ஊரடங்கு அமல் செய்துள்ளது அம்மாநில அரசு.

சட்ட ஒழுங்கு சீர்குலைந்த காரணத்தாலும், அசம்பாவித சம்பவங்கள் மற்றும் உயிர் சேதத்தை தடுக்கும் விதமாக கடந்த டிசம்பர் 31-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு உத்தரவு ரத்து செய்யப்பட்டு முழு ஊரடங்கு உத்தரவு இம்பால் மேற்கு மாவட்டத்தில் உடனடியாக அமல் செய்யப்பட்டுள்ளது என அம்மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

“இந்தச் சம்பவத்தை அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மணிப்பூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மக்கள் வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்பதை உறுதி அளிக்கிறேன். அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவும்” என அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் மக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பிறகு ஆவேசமடைந்த மக்கள் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று அடையாளம் தெரியாத சிலர் மேற்கொண்ட தாக்குதலில் காவல் துறையை சேர்ந்த மூவர் காயமடைந்தனர்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE