இந்தியாவில் ஜேஎன்.1 பாதிப்பு அதிகரிப்பு: ஒரே நாளில் 797 பேருக்கு கரோனா உறுதி; 5 பேர் பலி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4,091 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (டிச.29) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோவிட் தொற்று காரணமாக ஐந்து பேர் இறந்திருப்பதாக செய்திகள் பதிவாகியிருக்கின்றன. கேரளாவில் இருவரும், மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தலா ஒருவரும் கோவிட் தொற்று காரணமாக மரணித்திருக்கின்றனர்.

இதையடுத்து, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4,091 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நாடு முழுவதும் கரோனாவில் தொற்றில் இருந்து மீண்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,44,74246 ஆக இருக்கிறது. நாடு முழுவதும் மரணித்தவர்களின் எண்ணிக்கை 5,33,351 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜேஎன்.1 திரிபு வைரஸ் எளிதில் பரவக் கூடியது என்றும், இது முதலில் குளிர் போன்ற லேசான அறிகுறிகளை ஏற்படுத்தும் என்றும், அதன் பிறகு மேல் சுவாசக் குழாயில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்கிடையில், டிசம்பர் 28 வரை வெளியான தகவல்படி, கரோனா ஜேஎன்.1 திரிபு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145-ஐ எட்டியுள்ளது. இந்த மாதிரிகள் 2023 நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை சேகரிக்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE