புதுடெல்லி: நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி காவல் துறை, பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தது.
காவல் துறை சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர் அகாந்த் பிரதாப் சிங், “மிகுந்த திட்டமிடலுடன் இந்த அத்துமீறல் நிகழ்த்தப்பட்டுள்ளது” என்று கூறி, கைது செய்யப்பட்டவர்கள் உடனான காவல் துறை விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இது தொடர்பான விசாரணையை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஹர்தீப் கவுர் ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த 13-ம் தேதி, பார்வையாளர்களாக நுழைந்த சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகியோர் திடீரென்று, மக்களவைக்குள் நுழைந்து வண்ணப்புகைக் குப்பிகளை வீசினர். இவர்களுக்கு ஆதரவாக அமோல் ஷிண்டே, நீலம் ஆகிய இருவர் நாடாளுமன்றத்துக்கு வெளியே வண்ணப் புகைக் குப்பிகளை வீசி கோஷமிட்டனர்.
இதையடுத்து இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா உட்பட 6 பேரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி காவல் துறை கைது செய்தது. இவர்களுக்கு, ஜனவரி 5-ம் தேதி வரையில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி காவல் துறை அனுமதி கோரியுள்ளது. இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று காவல் துறை விசாரணை நடத்தியுள்ளது.