கடத்தல் சந்தேகம் காரணமாக பிரான்சில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம் மும்பை வந்தடைந்தது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரான்சில் கடந்த 4 நாட்களாக தடுத்து நிறுத்தப்பட்ட பயணிகள் விமானம் இன்று (டிச.26) அதிகாலை 4 மணிக்கு மும்பை வந்தடைந்தது

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மத்திய அமெரிக்க நாடான நிகரகுவா நோக்கி கடந்த 21 ஆம் தேதி புறப்பட்ட பயணிகள் விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே உள்ள வத்ரி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில், 276 பயணிகள் இருந்துள்ளனர். இவர்களில், பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். இந்தி மற்றும் தமிழ் பேசக்கூடியவர்கள். வத்ரியில் இருந்து விமானம் புறப்படுவதற்கு முன்னதாக, அதில், ஆள் கடத்தல் நடந்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, பயணிகளை கீழே இறக்கிய பிராஸ் அதிகாரிகள் அவர்களின் ஆவணங்களை பரிசோதித்தனர். அதில், 11 சிறுவர்கள் பெற்றோர் அல்லது உறவினர் இன்றி விமானத்தில் பயணித்திருப்பது கண்டறியப்பட்டது. அதோடு, 5 சிறுவர்கள் உள்ளிட்ட 20 பேர் பிரான்சில் தங்கிவிடப் போவதாகக் கூறி அடைக்கலம் கேட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் உள்ள அறைகளில் தங்கவைக்கப்பட்டனர். இதனையடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பிரான்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ஆள்கடத்தல் குற்றச்சாட்டு தொடா்பாக பயணிகளிடம் 4 நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பயணிகளில் பலர் இந்தியிலும், தமிழிலும் பேசி உள்ளனர். இதையடுத்து, மொழிபெயர்ப்பாளர்கள் நீதிபதிகளுக்கு உதவி உள்ளனர். இந்த விசாரணையில் ஆள் கடத்தல் சந்தேகம் நிவர்த்தி ஆனதையடுத்து, விமானம் புறப்பட நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, விமானம் இன்று காலை மும்பை வந்தடைந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE