முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு தலைவர்கள் புகழாரம்: தமிழக பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள்

By செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 99-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தலைவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: சிறந்த தொலைநோக்கு பார்வையாளர், புகழ்பெற்ற அரசியல் தலைவர், சிறந்த எழுத்தாளர், கவிஞர், ஈர்க்க வைக்கும் பேச்சாளர் என பன்முகத் திறனுடன் திகழ்ந்த வர்வாஜ்பாய். பிறந்தநாளில் அவருக்கு பணிவுடன் மரியாதை செலுத்துவோம். இந்தியாவை முன்னேற்ற வைக்கும் அவரது பார்வை, வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க என்றும் நம்மை வழிநடத்தும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: சுதந்திர இந்தியாவின் உள்நாட்டு, வெளிநாட்டுகொள்கைகளை வடிவமைத்ததில் மிகப்பெரிய பங்கு வகித்தவர். அணு ஆயுத நாடுகளில் ஒன்றாக உருவாக்கி, நமது பாரதத்தைவல்லரசுகளின் வரிசையில் இடம்பெற செய்தவர். கார்கில் போரில்நம் தேசத்தின் எதிரிகளை தோற்கடித்தவர். பெண்களின் முன்னேற்றம், சமத்துவம், சமூக நீதிக்காக அயராது உழைத்தவர். அவரது தலைமையும், தொலைநோக்கு பார்வையும் கோடிக்கணக்கான நம் நாட்டு மக்களை இன்றும் வழி நடத்துகிறது.

தலைவர்கள் மரியாதை: சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் படத்துக்கு பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, ஊடகபிரிவு மாநில தலைவர் ரங்கநாயகலு, மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, தமிழக பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சென்னையில் சூளைமேடு தயாளு அம்மாள் தெரு, எழும்பூர்வீராசாமி தெரு, அயனாவரம் ஜாயின்ட் ஆபீஸ் பகுதி, ராமானுஜர் நகர் உள்ளிட்ட இடங்களில் பாஜகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். வாஜ்பாய் பிறந்தநாளை நல்லாட்சி தினமாகபல்வேறு இடங்களில் பாஜகவினர் கொண்டாடினர்.

டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் தமாகா தலைவர்ஜி.கே.வாசன் மரியாதை செலுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE