பிரதமர் வேட்பாளராக கார்கே இருப்பதில் வருத்தம் இல்லை: பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் விளக்கம்

By செய்திப்பிரிவு

பாட்னா:‘‘இண்டியா கூட்டணியில் நான் எந்த பதவியையும் விரும்பவில்லை. பிரதமர் வேட்பாளராக கார்கேவின் பெயர் முன்மொழியப்பட்டதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை’’ என்று பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதில் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவு, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 28 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக தங்களது பெயர் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், டெல்லியில் கடந்த 19-ம்தேதி நடந்த இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்று திரிணமூல், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் பரிந்துரை செய்தன. இதை பல கட்சிகள் ஆமோதித்தன. இதன் காரணமாக நிதிஷ் குமார் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர்கள், கார்கேவை கடுமையாக விமர்சித்தனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சில நாட்களுக்கு முன்பு நிதிஷ் குமாரிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது பிரதமர் வேட்பாளர் விவகாரம் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த சூழலில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, பிஹார் தலைநகர் பாட்னாவில் நிதிஷ் குமார் நேற்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மறைந்த தலைவர் வாஜ்பாயை மிகவும் மதிக்கிறேன். எனது வாழ்நாள் முழுவதும் அவருக்கு மரியாதை செய்வேன்.

இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக கார்கே பெயர் முன்மொழியப்பட்டதில் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. இண்டியா கூட்டணியில் நான் எந்த பதவியையும் விரும்பவில்லை. கூட்டணியில் தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

ஐக்கிய ஜனதா தளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக சிலர் (பாஜக தலைவர்கள்) கூறுவதில் உண்மை இல்லை. இண்டியா கூட்டணியிலும் எவ்வித விரிசலும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE