புதுடெல்லி: நாடாளுமன்றத்திலிருந்து 146 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்ததன் மூலம் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு அனுப்பிய கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது: மக்களவை மற்றும் மாநிலங்களவையிலிருந்து 146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது நாடாளுமன்ற வரலாற்றில் இதுவேமுதல் முறை. இந்த நடவடிக்கையின் மூலம் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளது. இதனை மத்திய அரசு, முன்பே தீர்மானித்து, திட்டமிட்டு நிறைவேற்றியுள்ளது வெளிப்படையாகவே தெரிகிறது.
146 எம்.பி.க்களை இடை நீக்கம் செய்ததன் வாயிலாக கோடிக்கணக்கான வாக்காளர்களின் குரலை நசுக்கும் வேலையை பாஜக செய்துள்ளது. நாடாளுமன்ற நடைமுறைகளை நாசப்படுத்துவதற்கும், அரசியலமைப்பை சீர்குலைப்பதற்கும் ஆளும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதை ஒரு வசதியான ஆயுதமாக கையிலெடுத்துள்ளது. எனவே, மிக தீவிரமான இப்பிரச்சினையை நடுநிலையாக ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.