காஷ்மீரில் மர்ம முறையில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு இழப்பீடு, வேலை

By செய்திப்பிரிவு

ஜம்மு: மர்மமான முறையில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கப்படும் என காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீர் யூனியன் பிரதேசம் பூஞ்ச் மாவட்டம் பபியாஸ் கிராமத்தில் கடந்த 21-ம் தேதி ஒரு வளைவில் சென்று கொண்டிருந்த 2 ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டை நடந்த இடத்தில் 3 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அரசியல் கட்சியினர் கூறும்போது, “வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ராணுவம் சிலரை அழைத்துச் சென்றது. அவர்களில் 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்” என்றனர்.

இந்நிலையில் காஷ்மீர் நிர்வாகத்தின் எக்ஸ் சமூக வலைதளத்தில், “பபியாஸ் கிராமத்தில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும் எனஅரசு அறிவித்துள்ளது. அத்துடன் அவர்களின் வாரிசுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது” என பதிவிடப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணி அடர்ந்த வனப் பகுதியிலும் அருகில் உள்ள ரஜவுரியின் தனாமண்டி பகுதியிலும்தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இணைய சேவை முடக்கம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஞ்ச், ரஜவுரி மாவட்டங்களில் மொபைல் இணையதள சேவையை அதிகாரிகள்தற்காலிகமாக முடக்கியுள்ளனர். வதந்திகள் பரவுவதை தடுக்கவும் விஷமிகள் சட்டம் ஒழுங்குபிரச்சினை ஏற்படுத்த முயற்சிப்பதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதற்றமான பகுதிகளில் காவல் துறையினர் மற்றும்துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராணுவம், காவல்துறை அதிகாரிகள் மற்றும்உயரதிகாரிகள் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE