“எங்களுக்கு பகவத் கீதை, ராமாயணம் போல தேர்தல் அறிக்கை புனிதமானது” - ம.பி முதல்வர் மோகன் யாதவ்

By செய்திப்பிரிவு

போபால்: தேர்தல் அறிக்கை தங்களுக்கு பகவத் கீதை, ராமாயணம் போன்று புனிதமானது என்று அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மோகன் யாதவ் உரை நிகழ்த்தினார். அப்போது, ''உலகின் ஏழு புனித நகரங்களில் ஒன்றான அவந்திகாவில் இருந்து நான் வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். சட்டப்பபேரவைத் தேர்தலின்போது பாஜக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த தேர்தல் அறிக்கை எங்களுக்கு பகவத் கீதையைப் போன்று, ராமாயணத்தைப் போன்று புனிதமானது. அதில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம்.

மாநில அரசின் பணி என்பது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதுதான். அதோடு, மாநிலத்தின் நற்பெயரையும், நாட்டின் நற்பெயரையும் உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு எங்களது செயல்பாடு இருக்கும்'' என மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE