மத்திய அரசு நிதி தருவதில் பாரபட்சம்: கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

By செய்திப்பிரிவு

கோட்டயம்: நிதி ஒதுக்கும்போது மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக கூறி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: நிதி ஒதுக்கீடு செய்யும்போது தென் மாநிலங்களை புறக்கணிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசின் இந்த செயல், கேரளா போன்ற தென் மாநிலங்களை நிதி நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது. அரசியல் சாசனத்துக்கு விரோதமான வகையில் பாரபட்சமான இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிடக்கோரி மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தியபோதும், பழிவாங்கும் நடவடிக்கைகளை அது நிறுத்தவில்லை. மாறாக தீவிரப்படுத்தியுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சிக் கொள்கைகளை புறக்கணித்து கேரளாவை இக்கட்டான சூழலில் தள்ளும் மத்திய அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு எதிராக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை தற்போது நாடியுள்ளது. மத்திய-மாநில தகராறுகளைப் தீர்ப்பதைக் கையாளும் அரசியலமைப்பின் 131-வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்திடம் உத்தரவு பெறுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டே இந்த சட்டப் போராட்டத்தை கேரளா தொடங்கியுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE