மரண தண்டனை கைதியாக சிறையில் கேரள நர்ஸ் - ஏமன் செல்ல தாய்க்கு டெல்லி ஐகோர்ட் அனுமதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள தன் மகளை எப்படியாவது தாயகம் மீட்டுக்கொண்டுவர ஏமன் நாட்டுக்குச் செல்லப் போராடிய தாய்க்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. கேரள செவிலி நிமிஷா பிரியாவைக் காண ஏமன் செல்ல மத்திய அரசு தேவையான வழிவகையைச் செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிமிஷாவின் தாயார் ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் உள்ள ஓர் விமான நிறுவனத்தில் விமானியாகப் பணி புரியும் இந்தியரான சாமுவேல் ஜெரோம் என்பவருடன் பயணிப்பார் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாமுவேல் நிமிஷா மீது குற்றஞ்சாட்டிய குடும்பத்தாருடன் சமரசம் பேச உதவ முன்வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், நிமிஷாவின் தாயார் தனது பயணம் தொடர்பாக ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் தனது பயண விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

நடந்தது என்ன? - கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் ஏமனில் செவிலியாகப் பணி புரிந்து வந்தார். தலோல் அப்டோ மஹ்தி என்பவரின் கட்டுப்பாட்டில் நிமிஷா இருந்துள்ளார். அவர் நிமிஷாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துவைத்திருந்தார். ஏமனில் பணியில் தொடர விரும்பாத நிமிஷா பாஸ்போர்ட்டத் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால் தலோல் மஹ்தி அதைத் தரவில்லை. தனது பாஸ்போர்ட்டை மீட்க முயற்சித்துள்ளார். பலமுறை முயற்சித்தும் அது முடியாததால் ஒருமுறை அவர் தலோல் அப்டோ மஹ்திக்கு ஊசி மூலம் மயக்க மருந்தை செலுத்தியுள்ளார். இதில் அந்த நபர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து, கடந்த 2017-ஆம் ஆண்டு நிமிஷா பிரியாவை போலீஸார் கைது செய்தனர்.

நிமிஷா தன்னை மஹ்தி துன்புறுத்தியதாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டதாகவும் அதனாலேயே அவரிடமிருந்து பாஸ்போர்ட்டை பெற முயற்சித்ததாகவும், ஆனால் அந்த முயற்சி விபரீதமாக முடியும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும், கொலை செய்யும் எண்ணமிருக்கவிலை என்றும் கூறியுள்ளார். ஆனால், அவர் தரப்பு நியாயத்தைக் கேட்காத ஏமன் அரசு அவருக்கு 2018 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. அப்போதிலிருந்து அவர் சிறையில் தான் இருக்கிறார். இதனையடுத்து நிமிஷா பிரியாவின் தாயார் ஏமன் சென்று தன் மகளை மீட்டுவர முயற்சித்து வந்தார்.

தலோலின் குடும்பத்தாருடன் சில இடைத்தரகர்கள் மூலம் சமரசம் பேசினார். தலோல் இழப்பை ஈடுசெய்ய பணம் கொடுத்தாவது மகளை மீட்பது என அவர் முடிவு செய்தார். அதற்கு சாமுவேல் ஜெரோம் என்பவர் உதவி புரிய ஏமன் செல்ல நிமிஷாவின் தாய் முடிவு செய்தார். ஆனால் ஏமன் நாட்டுக்குச் செல்ல மத்திய அரசு சில காலமாக தடைவிதித்திருந்த நிலையில் அவரால் அங்கு செல்ல இயலாமல் இருந்தது. இதனையடுத்து அவர் டெல்லி நீதிமன்றத்தை நாடினார். தற்போது நீதிமன்றம் அவர் டெல்லி செல்ல வழிவகை செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE