“காங்கிரஸ் குறித்த உள்துறை அமைச்சரின் குற்றச்சாட்டு துரதிர்ஷ்டவசமானது” - மாணிக்கம் தாகூர்  

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் எம்பி தீரஜ் சாகுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரிச் சோதனை நடந்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் காங்கிரஸை ஊழலுடன் தொடர்புபடுத்தி பேசியது துரதிர்ஷ்டவசமானது என்று அக்கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், "உள்துறை அமைச்சர் இப்படி பேசியிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அங்கே ஊழல் எதுவும் இல்லை. அதில் ஊழல் எங்கே இருந்து வருகிறது. அவர் ஒரு காங்கிரஸ் எம்.பி. அவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார், அவருடைய தொழிலைப் பற்றி அவர் விளக்கமளிக்க வேண்டு. அவர் அமைச்சரோ அல்லது அரசு இயந்திரத்தில் அதிகாரம் மிக்கப் பதவியிலோ இல்லை. கடந்த 40 ஆண்டுகளாக தொழில் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கென தனியாக தொழில் இருக்கிறது என்று கூறியவர், நரேந்திர தோமரின் மகனின் ரூ.500 கோடி பேரம் குறித்த வழக்கு என்னவானது" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் எம் பி வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனை பற்றி பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகு ஒரு எம்.பி. வீட்டில் இருந்து இவ்வளவு பணம் கைப்பற்றப்படுவது இதுவே முதல்முறை. கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது ஆனால் ஒட்டுமொத்த இண்டியா கூட்டணிக் கட்சிகளும் இந்த ஊழல் விவகாரத்தில் மவுனமாக இருக்கிறது. ஊழல் என்பது காங்கிரஸின் இயல்பிலேயே இருப்பதால் அக்கட்சி மவுனமாக இருக்கிறது. ஆனால் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், திமுக மற்றும் சமாஜ்வாதி கட்சி எல்லாம் அமைதியாக இருக்கின்றன.

விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று மோடிக்கு எதிராக ஏன் பிரச்சாரம் செய்யப்பட்டது என்று எனக்கு இப்போது புரிகிறது. அவர்களின் ஊழல் குறித்த ரகசியங்கள் வெளிப்பட்டு விடும் என்பதால் அவர்கள் அவ்வாறு செய்துள்ளனர்" என்று கூறியிருந்தார்.

இதனிடையே சிவசேனா (உத்தவ் அணி) எம்பி பிரியங்கா சதுர்வேதி, "காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகுவின் வணிக நலன்களுக்காக எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டுவது அநீதியானது. தீரஜ் சாகுவுக்கு ஆதரவாக நிற்பது என்பது அவரின் செயல்களை ஆதரிப்பதாக அர்த்தம் இல்லை. அவர் பாஜகவில் சேர்ந்திருந்தால் அவரது குற்றங்கள் அனைத்தும் தூய்மையாக்கப்பட்டிருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

பின்னணி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியை சேர்ந்தவர் தீரஜ் குமார்சாகு. காங்கிரஸ் சார்பில் 3 முறை மாநிலங்களவை எம்.பி.யானார்.இந்நிலையில், ஒடிசாவின் பொலாங்கிர் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பால்டியோ சாகு சன்ஸ் அண்ட் குரூப் நிறுவனத்தின் பங்குதாரராக தீரஜ் குமார் சாகு உள்ளார். இதன் கிளைகள் ஜார்க்கண்ட், மேற்குவங்கத்தில் செயல்படுகின்றன. பவுத் டிஸ்டிலெரி சார்பில் ஒடிசாவில் மட்டும் 250 மதுக்கடைகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய மதுபான ஆலைகளில் இதுவும் ஒன்று.

கடந்த 6-ம் தேதி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள தீரஜ் குமார் சாகு எம்பியின் வீடு மற்றும் அவரது சொந்தமான அலுவலகங்கள் என 43 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில் இதுவரை ரூ.318 கோடிக்கும் அதிகமான ரொக்க பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. மேலும் ரூ.150 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE